கொரொனா அச்சத்திற்கு இடையே ஆயுத பூஜை கொண்டாட்டம்..!
கொரொனா அச்சத்திற்கு இடையே ஆயுத பூஜையை கொண்டாடுவதற்கான பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். நவராத்திரி விழாவின் இறுதி நாளான இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி சென்னை மாநகர பகுதியில் உள்ள மலர் சந்தையில் பூக்கள் வாங்குவதற்காக மக்கள் குவிந்தனர். தொடர் மழை காரணமாக சந்தை முழுவதும் சேறும் சகதியுமாக காணப்பட்டதால் இந்த ஆண்டு விற்பனை குறைந்ததாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. மல்லிகை வரத்து வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகரித்ததன் விளைவாக விலை சரிபாதிக்கும் கீழ் சரிந்தது.
மதுரை மட்டுமின்றி தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 90 டன் வரை பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. நள்ளிரவை பொருட்படுத்தாது காஞ்சிபுரம் சந்தையில் குவிந்த சிறு, குறு வியாபாரிகள் காத்திருந்து பூக்களை வாங்கி சென்றனர்.
ஆயுத பூஜையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பூக்கள் மற்றும் பழங்களின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. பூக்கள், பொரி, கடலை, வாழை இலை, இனிப்புகளில் விற்பனையும் அமோகமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.






