வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவது எப்படி..!
வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஹிந்தி மொழியில் தேர்ச்சி பெற இயலாத நிலையில் தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பணிகளில் அமர்வது எப்படி என தெரியவில்லை என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிர்ப்தி தெரிவித்துள்ளது.
ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த சரவணனுக்கு நீலகிரி ஆயுத தொழிற்சாலையில் பணி அளிக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் மாநிலங்களில் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் அந்த மாநில மக்களுடன் தகவல் தொடர்பு கொள்ளும் வகையில் அப்பகுதி மொழியை அறிந்திருக்க வேண்டும் என்றும் ஆனால் அதில் தேவையற்ற பல அரசியல் நகர்வுகள் இருப்பதாக கூறினர்.
வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஹிந்தி மொழியில் தேர்ச்சி பெற இயலாத நிலையில் தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பணிகளில் அமர்வது எப்படி என தெரியவில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
நீதிமன்றம் கேள்வி எழுப்பினால் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட இயலாது எனக் கூறப்படுகிறது என்றும் அதிருப்தி தெரிவித்தனர். தேர்வு முறையில் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் தேவை என்றும் கூறினார்.
தமிழகத்தில் மின் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் பலர் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக கூறிய நீதிபதிகள் உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.






