பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்..!
பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது. முதல் கட்டமாக சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் 149 பேரும், முன்னாள் ராணுவ வாரிசுதாரர்கள் 855 பேரும், விளையாட்டு பிரிவினர் 1409 பேரும் பொறியியல் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைமுறைகள் அனைத்தும் இன்று முதல் ஐந்தாம் தேதி வரை இணைய வழியிலேயே நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் கட்டணம் செலுத்தவும், 3 மற்றும் 4ம் தேதிகளில் விருப்ப கல்லூரிகளை வரிசைப்படுத்தவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் தேதி தோராய ஒதுக்கீடு வழங்கப்பட்டு ஆறாம் தேதி இறுதி ஒதுக்கீடு வெளியிடப்படும் என தொழில்நுட்ப கல்வி கழகம் அறிவித்துள்ளது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் எட்டாம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






