மறைந்த எஸ்.பி.பி க்கு கொரோனா “நெகட்டிவ்’!! பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு!!
மறைந்த எஸ்.பி.பி. க்கு கொரோ நெகட்டிவ் என மருத்துவமனை தரப்பில் மருத்துவ சோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. செங்குன்றத்தில் உள்ள அவருடைய பண்ணைத் தோட்டத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.
பாடும் நிலா எஸ்.பி.பி.யின் மறைவு இந்திய திரையுலகை பெரும் சோகத்திலும், கண்ணீர்க் கடலிலும் ஆழ்த்தியுள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் மிகச் சிறந்த பின்னணி பாடகராக மட்டுமின்றி நடிகராகவும் ஜொலித்த எஸ்.பி.பி.யின் மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி கொரோனா தொற்று பாதிப்பு அறிகுறி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி.க்கு மூச்சுத் திணறல், நுரையீரல் கோளாறு காரணமாகவும் உடல் நிலை பாதிக்கப்பட்டது.
கடந்த 50 நாட்கள் சிகிச்சையில் இருந்த அவரது உடல் நிலை முதலில் மோசமாகி பின்னர் படிப்படியாக முன்னேற்றம் கண்டது. ஆனால் மீண்டும் உடல் நிலை மோசமாகி நேற்று முதல் கவலைக்கிடமாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு அவரது உயிர் மூச்சு பிரிந்ததாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், எஸ்.பி.பி.க்கு கடைசியாக கடந்த 4-ந் தேதி எடுக்கப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது. இதனை எம்.ஜி.எம். மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனால் எஸ்.பி.பி.யின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவருடைய இல்லத்தில் வைக்கப்படுகிறது. பின்னர் செங்குன்றம் அருகே தாமரைப் பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணைத் தோட்டத்திற்கு இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளது.







