கொரொனா தொற்று மற்றும் இதய பிரச்சனை இருந்த பெண்ணுக்கு சுக பிரசவம்..! மருத்துவ குழுவினருக்கு பாராட்டு..!
இதய பிரச்சனை மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவம் நடைபெற்றது. திருச்செந்தூரை சேர்ந்த பெண்ணுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்னர் இதய பாதிப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது.
நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் அதிகமானதால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரொனா தொற்றும் அந்த பெண்ணுக்கு இருந்தது தெரியவந்ததால் உறவினர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர்.
பிரசவ வலி அதிகமானால் இதயப் பிரச்சினை பெரிதாகி விடும் என்பதால் வலி ஏற்படாமல் இருக்க குறைந்த அளவு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு வலி தெரியாமல் பெண் குழந்தை பிறந்தது.
வெற்றிகரமாக சிகிச்சை அளித்த மருத்துவர் குழுவினரை மருத்துவமனை முதல்வர் சங்குமணி பாராட்டியுள்ளார்.







