விநாயகர் சதுர்த்தி விழா நடத்த எவ்வாறு அனுமதிக்க முடியும் ?
தினந்தோறும் 6000 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த எவ்வாறு அனுமதிக்க முடியும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ராஜபாளையம் தருமபுரம் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழாவை ஆகஸ்ட் 21 மற்றும் 22ம் தேதி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நடத்த அனுமதி அளிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பாக விசாரணைக்கு வந்த போது கொரொனா சூழலில் விழாக்களுக்கு அனுமதி கொடுத்தால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படக்கூடும் என குறிப்பிட்டார். இதுபோன்ற தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டனர்.
மனுதாரர் மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றம் அதிக அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்தார். மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.







