சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 காவலர்களுக்கு ஜாமீன் மறுப்பு..!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்களான முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரின் ஜாமீன் மனுவை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சாத்தான்குளம் சித்திரவதை கொலை தொடர்பாக காவல் துறையை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில் காவலர்களான முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். காணொளி காட்சி மூலம் விசாரணை நடைபெற்றபோது முத்துராஜ், தாமஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்குமாறு வாதிட்டனர்.
அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துராஜ், தாமஸ் ஆகியோர் முக்கிய குற்றவாளி என அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தெரிய வந்திருக்கிறது என்றும், மேலும் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் வாதிடப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி காவலர்கள் முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.






