சாத்தான்குளம் விசாரணைக்கு அழைத்து சென்ற மகேந்திரனும் கொலையா? வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
சாத்தான்குளம் காவல் துறையினர் காவலில் வைத்து விசாரித்து அனுப்பிய பிறகு மகேந்திரன் என்பவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சாத்தான்குளம் தந்தை மகன் சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ ஏற்கனவே விசாரித்து வருகிறது.
இந்த சூழலில் சாத்தான்குளம் காவல் துறையினர் காவலில் வைத்து விசாரித்து அனுப்பிய பிறகு மகேந்திரன் என்பவர் உயிரிழந்தது தொடர்பாக அவரது தாயார் வடிவு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் தனது மூத்த மகன் துரையை தேடி சந்தேகத்தின் பேரில் விசாரிக்க வந்த ரகு கணேஷ் தனது இளைய மகன் மகேந்திரனை அழைத்து சென்றதாகவும் காவல் நிலையத்தில் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி ஆய்வாளர் எஸ்ஐ ரகு கணேஷ் ஆகியோர் தனது மகன் சுயநினைவை இழக்கும் அளவுக்கு தாக்கியதாகவும் கூறியிருக்கிறார்.
தலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் மகேந்திரன் கடந்த மாதம் 13ம் தேதி உயிரிழந்ததாகவும் வடிவு கூறியுள்ளார். எனவே தனது மகனின் இறப்பு குறித்து முறையாக விசாரிக்கக் கோரி அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டு உள்ளது. மேலும் தூத்துக்குடி ஆட்சியர், மாவட்ட எஸ்பி, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் ஆகியோருக்கும் நோட்டீஸ் பிறப்பித்தது. ஏற்கனவே சாத்தான்குளம் தந்தை மகன் சித்திரவதை கொலை வழக்கு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.







