தமிழகத்தில் ஒரே நாளில் கொரொனாவுக்கு 38 பேர் உயிரிழந்துள்ளனர்!
தமிழகத்தில் கொரொனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிதாக 1,974 பேருக்கு தொற்று கண்டறிய பட்டிருக்கும் நிலையில் ஒரே நாளில் 38 மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 38 பேர் நோய் தொற்றுக்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் நான்கு பேர் 40 வயதிற்குட்பட்டவர்கள் என்று சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 38 பேரில் 7 பேர் வேறு எந்த நோயும் இல்லாதவர்கள் என்று கூறப்படும் நிலையில் கடந்த ஒன்பது நாட்களில் இணை நோயில்லாத 41 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இறப்பு விகிதம் 0.97 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 661 ஆக அதிகரித்துள்ளது. 24 ஆயிரத்து 547 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 54.96 சதவீதமாக உள்ளது.







