உடல் பருமன் உள்ளவர்களுக்கு கொரொனா பாதித்தால் உயிரிழக்கும் அபாயம்!
உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்படும் போது உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உலகம் முழுவதும் 215 நாடுகளை பாதித்துள்ள கொரோனா வைரஸ் வயதானோரையும், உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டோரையும் அதிகம் தாக்கும் என்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டு இருந்தது.
இதன் தொடர்ச்சியாக உடல் பருமன் அதிகமாக இருப்போரும் கொரொனாவால் பாதிக்கப்படுகிறார்கள் என்று அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உடல் பருமன் அதிகம் இருப்போர் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. ஒருவருடைய உடல் எடை அவருடைய உயரத்திற்கு ஏற்ற படி தான் இருக்க வேண்டும்.
அதாவது ஒருவரின் உடல் எடையில் இருந்து உயரத்தின் இரு மடங்கை வகுத்தால் கிடைப்பது சரியான உடலுக்கு ஏற்ற எடை விகிதமாகும்.உடல் எடை அதிகமாக இருந்தால் நுரையீரலின் செயல்பாடு பாதிக்கப்பட்டு ரத்தத்திற்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்து விடும். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கொரோனாவுக்கு உயிரிழக்க நேரிடுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பின் படி இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் 6 பேர் உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள். பொதுவாக உடல் பருமன் காரணமாக நுரையீரலின் இயக்கமும் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
உடல் பருமனோடு இருப்பவர்கள் சுறுசுறுப்பாக இயங்க முயற்சிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். எடையை குறைக்க தினமும் அரை மணி நேரமாவது நடைபயிற்சியை கட்டாயமாக்கி கொள்ளுங்கள் என்றும் மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.







