11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் திமுக அளித்துள்ள புதிய மனு
ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் நீதிமன்றமே தன் அதிகாரத்தை பயன்படுத்தி முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என திமுக தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதே பின்னணி கொண்ட ஒரு வழக்கில் மணிப்பூர் சட்ட மன்ற அலுவல்களில் பங்கு பெற 7 எம்எல்ஏக்களுக்கு தடை விதிக்கப்பட்டதையும் திமுக சுட்டிக்காட்டியுள்ளது. இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க திமுக கூறியுள்ளதால் இது விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி ஆன நிலையில் அந்த கட்சி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இதை விசாரித்த நீதிபதிகள் இந்த விவகாரத்தில் சபாநாயகரே இறுதி முடிவு எடுப்பார் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்ட பின்னரும் இதுவரை சபாநாயகர் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை எனவும் இதை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றும் கூறி உச்ச நீதிமன்றத்தில் திமுக புதிய மனு தாக்கல் செய்துள்ளது.







