சிறப்பு கப்பல்கள் மூலம் பயணிகள் வருகை…!
கொரொனா பாதிப்பினால் பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வர விமானங்கள் மற்றும் கப்பல் படை கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்தியாவின் இரண்டு சிறப்பு விமானங்கள் துபாயில் இருந்து இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தது. முதலில் வந்த விமானத்தில் 152 பேரும், இரண்டாவது விமானத்தில் 127 பேரும் வந்தடைந்தனர்.
அவர்களுக்கு பரிசோதனை நடைபெற்றது. பின்னர் பயணிகள் மூன்று இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டனர். இதேபோன்று பக்ரைன் நாட்டில் இருந்து 182 பேர் கொச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். தனிமைபடுத்தப்பட்டுள்ள பயணிகள் தீவிர கண்காணிப்புக்கு பிறகு நோய்த்தொற்று இல்லை என்று உறுதியானதும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
இதைப்போன்று சிங்கப்பூர், வங்கதேசம், சவுதி அரேபியாவில் இருந்து நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து சேர்ந்தனர். இந்தநிலையில் மாலத்தீவில் இருந்து 698 இந்தியர்களுடன் இந்திய கடற்படையின் ஜலஷ்வா கப்பல் நேற்று இரவு புறப்பட்டது.
கொச்சிக்கு கப்பல்கள் வந்தடைந்ததும் 21 நாட்களுக்கு அவர்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 200 பயணிகளுடன் தூத்துக்குடி துறைமுகத்திற்கு மகர் கப்பல் நாளை வந்து சேரும் என்று கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.







