பாக்., பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா பாதிப்பா? தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டதால் பரபரப்பு!!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சமீபத்தில் சந்தித்த முக்கிய நபருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இம்ரான் கான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பு, இப்போது ஆசிய நாடுகள் பெரும்பாலானவற்றில் மையம் கொண்டுள்ளது. இந்தியாவைப் போல், அண்டை நாடான பாகிஸ்தானிலும், பாதிப்பு அதிகரித்து வருகிறது இதுவரை 9500 பேருக்கும் மேல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 197 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலக அளவில் ஆம்புலன்ஸ் மருத்துவ சேவையில் முன்னணியில் உள்ள சைதி அறக்கட்டளை நிறுவனரான பைசால் சைதி என்பவர் கடந்த 15-ந் தேதி இம்ரான் கானை சந்தித்துள்ளார். அப்போது கொரோனா நிவாரணமாக ரூ.1 கோடியை இம்ரான்கானிடம் பைசால் வழங்கியுள்ளார்.
இம்ரான்கானை சந்தித்த சில நாட்களில் பைசாலுக்கு கொரோனா தொற்று உறுதியானது சோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து இம்ரான்கானுக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இம்ரான்கானை தனிமைப்படுத்திக் கொள்ளும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியதுடன், அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.

.






