கொரோனாவை ஒழிக்க 5 அம்ச திட்டத்தை அறிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால்
கொரொனா வைரஸ் பரவலை தடுக்க டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஐந்து அம்சத் திட்டத்தை அறிவித்துள்ளார். டெல்லியில் கொரொனாவால் 520 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் டெல்லியில் கொரொனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளில் டெல்லி அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதற்காக ஐந்து அம்சத் திட்டத்தை அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. டெஸ்ட், ட்ரெஸ், ட்ரீட், டீம் வொர்க், டிராக் என்று இத்திட்டத்தை குறிப்பிட்டுள்ளது டெல்லி அரசு. இதன்படி டெல்லியில் அனைவருக்கும் கொரொனா பரிசோதனை செய்வது முதல் அம்சம். அடுத்து தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தப்படுவர்.
மூன்றாவதாக பாதித்த நபர்களை தனிமைப்படுத்தி விரிவான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். நான்காவதாக துறைசார்ந்த அதிகாரிகளை ஒருங்கிணைத்து கூட்டு முயற்சியாக செயல்படுவது என்றும், கடைசியாக கொரொனா பாதித்த மற்றும் அறிகுறிகளுடன் உள்ளவர்களை தொடர்ந்து கண்காணித்து நோயை முற்றிலும் தடுப்பதாகவும், எந்த அளவிற்கு பரிசோதனை செய்கிறோமோ அந்த அளவிற்கு நோயை கட்டுப்படுத்துவது எளிமையாகிவிடும் என்பதால் இனி முழு கவனமும் தனிநபர் பரிசோதனையில் செலுத்தப்படும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஆதரவற்றவர்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்து டெல்லியில் தங்கி பணியாற்றுவோர், வேலையில்லாதவர்கள் என 4 லட்சத்துக்கும் அதிகமானவர்களை முகாம்களில் தங்க வைத்து டெல்லி அரசு உணவு உள்ளிட்ட வசதிகளை அளித்து வருகிறது.







