வழக்கம் போல் வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின்! காலையிலேயே சுறுசுறுப்பான சூலூர் தொகுதி!!
சூலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், வழக்கம் போல் வாக்கிங் சென்றும், கடைப்பகுதிகளுக்கு நடையாய் நடந்து சென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
தமிழகத்தில், சூலூர் உட்பட 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கோவையில் சூலூர் தொகுதிக்குட்பட்ட இருகூர் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

வழக்கமான தனது பாணியில், சந்தைக்கு நடைபயணமாக சென்ற ஸ்டாலின், அங்கு கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
டிராக் சூட்,டீ சர்டுடன் இளைஞராகவே இருகூர் வாரச்சந்தைக்கு வந்தார் ஸ்டாலின். வியாபாரிகளிடமும், காய்கறி வாங்க வந்த பொதுமக்களிடமும் வாக்குகளை சேகரித்தார். அவருடன் பலரும் மொபைல் போனில் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

அங்கிருந்த கடைக்காரர்கள் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு தந்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். காய்கறி வியாபாரி ஒருவர் காலிபிளவர் கொடுக்க அதனை ஆசையோடு பெற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் அவருக்கு நன்றியை தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




