கோவை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் !!!
71 வது குடியரசு தின விழாவையொட்டி இன்று நாடு முழுவதும் வெகுவிமரிசையாக குடியரசுதின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக கோவை வ.உ.சி மைதானத்தில் குடியரசு தின விழாவிற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி அவர்கள் கோவை வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடி மேடைக்கு வருகை தந்தார். முன்னதாக அவர் காவல்துறை, தீயணைப்புத்துறை, மற்றும் ஆயுதப்படை ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும்,இந்த அணிவகுப்பு மரியாதையின் போது தேசிய மாணவர் படை,நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ராஜாமணி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர்,இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் மூலம் 8 பேருக்கு 29 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும்,சுய உதவி குழுவில் கடன் திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 55 நபர்களுக்கு 20 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயும்,தொழிலாளர் நல சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் பணியிடத்தில் மரணம் மற்றும் இயற்கை மரணம் என பதினோரு பேருக்கு 75 ஆயிரம் ரூபாயும்,மாவட்ட தொழில் மையம் சார்பில் நூற்பாலை துவங்கவும்,உதிரிபாகம் தயாரிப்பு துவங்கவும் இரண்டு பேருக்கு இரண்டு கோடியே 40 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயும், தோட்டக்கலைத்துறை மூலம் 5 பேருக்கு 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், வேளாண்மைத்துறை மூலம் 5 நபர்களுக்கு 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயும்,மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 20 பேருக்கு 6 லட்சத்து 88 ஆயிரம்,தாட்கோ மூலம் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகன கொள்முதல் வகைக்கு 3 நபர்களுக்கு 14 லட்சத்து 33 ஆயிரத்து 750 ரூபாய் என மொத்தம் 158 பயனாளிகளுக்கு 3 கோடியே 32 லட்சத்து 13 ஆயிரத்து 345 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை தீயணைப்பு துறை, மருத்துவம்,கல்வி, பொதுசேவை என பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட நபர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
மேலும்,குடியரசு தின விழாவையொட்டி மாவட்டத்தில் வசிக்கும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் கௌரவிக்கப்பட்டனர். பின்னர்,பள்ளி,கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.






