“இனி பாஜக சங்காத்தமே வேண்டாம்” – திமுகவில் இணைந்தார் பி.டி. அரசகுமார்!!
திருமண விழா ஒன்றில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை ஏகத்துக்கும் புகழ்ந்ததற்காக, தமிழக பாஜக துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் மீது அக்கட்சி நடவடிக்கை எடுத்தது. இதனால் அதிருப்தியடைந்த பி.டி.அரசகுமார், இன்று திமுகவிலேயே ஐக்கியமாகி விட்டார்.
புதுக்கோட்டையில் கடந்த ஞாயிறன்று திமுக பிரமுகர் பெரியண்ணன் இல்ல திருமண விழா, மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.இதில் பங்கேற்ற பாஜக துணைத் தலைவர் பி.டி.அரசகுமார், மேடையில் மு.க.ஸ்டாலினை ஏகத்துக்கும் புகழ்ந்து பேசினார். எம்.ஜி.ஆருக்கு அடுத்து தமிழக மக்களை கவர்ந்த தலைவர் என்றும், அடுத்த முதல் வரும் மு.க.ஸ்டாலின் தான் எனவும் அரச குமார் புகழ்ந்து பேசியது, பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனால், அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாஜக மேலிடத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், அதுவரை கட்சி நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள், ஊடக விவாதங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பாஜக செயலாளர் நரேந்திரன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதனால் அதிருப்தியடைந்த பி.டி.அரசகுமார், இன்று ஒரேயடியாக பாஜகவை விட்டே வெளியேறினார்.அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பி.டி.அரசகுமார், திமுகவில் ஐக்கியமானார். பின்னர் செய்தியாளர்களைச் ச்ந்தித்த அரச குமார், தாய்க் கழகத்திற்கே மீண்டும் திரும்பியது மகிழ்ச்சி என்றார். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய, இன்று முதல் தமது பயணம் தொடங்குவதாகவும் அரச குமார் தெரிவித்தார்.





