ரகசியமாய் சேகரித்த ரூ.46,000 செல்லாத நோட்டுகள்: வேதனையில் மூதாட்டிகள்
பேரன் பேத்திகளுக்காக ரகசியமாக சேமித்து வைத்த 46 ஆயிரம் ரூபாயும் பணமதிப்பு நீக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் என தெரிந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மூதாட்டிகள் இருவர் அதிர்ச்சி அடைந்தனர்.
பேரன், பேத்திகளுக்காக ரகசியமாக சேமித்து வைத்த 46 ஆயிரம் ரூபாயையும் பணமதிப்பு நீக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் என தெரிந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மூதாட்டிகள் இருவர் அதிர்ச்சி அடைந்தனர்.
பூமலூர் பகுதியை சேர்ந்த ரங்கம்மாள் மற்றும் தங்கம்மாள் சகோதரிகள் அவரது மகன்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். 75 வயதான ரங்கம்மாளுக்கு ஏழு பிள்ளைகளும், 72 வயதான தங்கம்மாளுக்கு ஆறு பிள்ளைகளும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர்.
பூவலூரில் தனித் தனியே வசித்து வரும் மூதாட்டிகள் இருவரும் வயதான காலத்தில் மருத்துவ செலவு, இறுதி சடங்கு மற்றும் பேரன் பிள்ளைகளுக்காக ரகசியமாக பணம் சேர்த்து வந்துள்ளனர். உடல்நிலை சரியில்லாததால் தங்கம்மாள் பாட்டியின் மருத்துவ சிகிச்சைக்காக பணம் தேவைப்படுகிறது என மகன் கேட்டதும் தான் சேர்த்து வைத்து இருப்பதாக கூறி தங்கம்மாள் 22 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்துள்ளார்.
அதை பார்த்து அவரது மகன் அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார். காரணம் அவை அனைத்தும் பணமதிப்பு நீக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள். தனது சகோதரி ரங்கம்மாளும் பணம் சேர்த்து வைத்திருந்ததாக தங்கம்மாள் பாட்டி கூறிய நிலையில் அவரிடம் இருந்தும் 24 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்லாத நோட்டுகளே யாருக்கும் தெரியாமல் இத்தனை ஆண்டுகளாய் சிறுகசிறுகச் சேமித்த பணம் செல்லாது என மகன்கள் கூறியதும் செய்வதறியாமல் திகைத்து போயுள்ளனர் மூதாட்டிகள் இருவரும். அவை செல்லாதவை என தங்களுக்கு தெரியாது எனவும் அவர்கள் பரிதாபத்துடன் கூறுகின்றனர்.





