மேல்மா சிப்காட் விவகாரத்தில் அரசு எடுத்த திடீர் முடிவு..!
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், மேல்மா கிராமத்தில் சிப்காட் தொழிற்பூங்காவின் 3வது நிலை அமைப்பதற்காக 22 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட இருப்பதாக தமிழக அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. அதேநேரம், மேல்மாவில் சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் அறிவிப்புக்கு பூவலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்தது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட சமூக வலைதள பதிவில், மேல்மாவில் போராடும் மக்களுக்கு ஆதரவாக இருப்பதாக தவெக கூறி இருந்ததாகவும், கடந்த ஆண்டு ஜூலை நடந்த தவெக செயற்குழு கூட்டத்தில் மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டி தீர்மானம் நிறைவேற்றப் பட்டதாக நிலையில், தன் நிலைப்பாட்டை தவெக அரசு மாற்றிக் கொண்டதா எனவும் கேள்வி எழுப்பியிருந்தது.
இதையடுத்து, சிப்காட்டுக்காக மேல்மா கிராமத்தில் நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் அடிப்படையில் அரசிதழில் உள்ள 22 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கை திரும்பப் பெறப்படுவதாக சிப்காட் மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




