சிங்கப்பெண் அதிரடிப்படையை தொடர்பு கொள்ள உதவி எண் அறிவிப்பு!
சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் தமிழ்நாட்டின் பொக்கிஷம் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்த நிலையில், அப்படையை தொடர்பு கொள்ள 1091 என்ற உதவி எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சிங்கப்பெண் அதிரடிப்படை குற்றவாளிகளை பிடிப்பதற்கு பதிலாக ரீல்ஸ் போட்டுக் கொண்டிருப்பதாக விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், சிங்கப்பெண் படை தமிழ்நாட்டின் பொக்கிஷம் எனவும் அவர்களை சிறுமைப்படுத்திப் பேசியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார். இந்நிலையில், சிங்கப்பெண் அதிரடிப்படையை தொடர்பு கொள்ள 1091 என்ற உதவி எண்-ஐ தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், பெண்கள் மற்றும் குழந்தைகள் காவல் உதவியை எளிதில் பெற 1091 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு அவசர அழைப்புக்கும் தனிக்கவனம் செலுத்தும் வகையில் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் கூடுதல் பிரத்யேக அழைப்பு ஏற்கும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1091 என்ற எண்ணுக்கு அழைத்தவுடன் அந்த தகவல் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் அருகிலுள்ள சிங்கப் பெண் அதிரடிப்படைக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





