--- --:--:-- --

தமிழ்நாடு – கர்நாடகா இடையே பெண்ணையாறு நதிநீர் பிரச்னை..!

9

ர்நாடக அரசு, பெண்ணையாற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே யார்க்கோல் கிராமத்திற்கு அருகே சட்டத்திற்குப் புறம்பாக அணை கட்டி வருவதாகத் தமிழக அரசு குற்றம் சாட்டியது. இதனால் தமிழகத்தின் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி, 2018-ஆம் ஆண்டு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

 

கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில், ஏற்கனவே 2019-ஆம் ஆண்டு நடுவர் மன்றம் அமைக்க நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இருப்பினும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண மத்திய அரசு முயன்றதால் காலதாமதம் ஏற்பட்டது.

 

மத்திய ஜல் சக்தி அமைச்சகம் அமைத்த பேச்சுவார்த்தைக் குழுவின் கூட்டங்கள் பலமுறை நடைபெற்றும், இரு மாநிலங்களுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. சமரச முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், “நடுவர் மன்றம் அமைப்பதே ஒரே தீர்வு” என்ற தனது நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருந்தது.

 

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. காலக்கெடு: மத்திய அரசு இன்று (பிப். 2, 2026) முதல் ஒரு மாத காலத்திற்குள் பெண்ணையாறு நதிநீர் தகராறு தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும்.

 

அரசிதழ் அறிவிப்பு: இதற்கான முறையான அறிவிப்பை மத்திய அரசு தனது அதிகாரப்பூர்வ அரசிதழில் (Gazette) வெளியிட வேண்டும். சட்டப்பிரிவு: 1956-ஆம் ஆண்டின் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிணக்குகள் சட்டத்தின் பிரிவு 5-ன் கீழ், இந்த விவகாரத்தை தீர்ப்பாயத்திற்குப் பரிந்துரைக்க வேண்டும்.

 

பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், சட்டப்பூர்வமாகத் தீர்ப்பாயம் அமைப்பதே இந்த நீண்ட காலப் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும் என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

 

தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்ப்பு தமிழக விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Right Menu Icon