வட நாட்டு அரசியலில் வரப்போகும் திருப்பம் – ரஜினி கூறியதை பகிர்ந்த வைரமுத்து
வடநாட்டு அரசயிலில் வரப்போவதாக நம்பப்படும் திருப்பம் குறித்து ரஜினிகாந்த் கூறியதை தனது எக்ஸ் தளத்தில் கவிஞர் வைரமுத்து பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள வைரமுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று எனது இல்லத்திற்கு வருகை தந்தார். ‘பாசமுள்ள மனிதனப்பா – நான் மீசவச்ச குழந்தையப்பா’ என்ற வரிகளுக்கு இப்போதும் அவர்தான் இலக்கியமாக இலங்குகிறார். வியப்புக்குரிய மனிதர்தான்.
அடித்துக்கொண்டோடும் அரசியல் வெள்ளம், சாய்த்துவிட்டோடும் சமூகப் புயல் இரண்டையும் அரைநூற்றாண்டாய்க் கடந்து தன்னிடத்தை ஒருவர் தக்கவைத்துக் கொள்வது ஜாதகத்தால் ஆவதல்ல; சாமர்த்தியத்தால் ஆவது. உணவு முறை உடல் நிலை குறித்து ஊடாடிய எங்கள் உரையாடல் ஊர் சுற்றக் கிளம்பியது எங்கள் நூறு நிமிட உரையாடலை ‘கிரீன் டீ’ கூடக் கெடுக்கவில்லை தமிழ்நாட்டின் நிகழ்கால வெப்ப அரசியல் குறித்து விவாதித்தோம். ஒவ்வொரு தரவிலும் அவருக்குள்ள ஆழமும் தெளிவும் உண்மையும் என் ஆர்வத்தைத் தூண்டின.
2027 ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்ட ஆண்டாக இருக்கும்; குறித்துக் கொள்ளுங்கள். அவரிடம் முதிர்ச்சி தெரிகிறது; முதுமை தெரியவில்லை. ‘இளமை இனிமேல் போகாது முதுமை எனக்கு வாராது’ என் தமிழ் பொய்யாகவில்லை என்று பதிவிட்டுள்ளார்.






