2 நாள் பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி!
இரண்டு நாட்கள் பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பானின் பிரதமர் ஷிகெரு இஷிபா அழைப்பின் பேரில், பிரதமர் மோடி நேற்றிரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் புறப்பட்டுச் சென்றார்.
இன்றும், நாளையும் ஜப்பானில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் (Shigeru) பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இந்தியா, ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பு தொடர்பாக இதில் ஆலோசிக்கப்படவுள்ளது.
இதனிடையே ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு சீனா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டின் தியான்ஜின் நகரில் வரும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டிற்கு இடையே சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜப்பான் மற்றும் சீனா நாடுகளுக்கான பிரதமர் மோடியின் பயணம் இந்திய நலன்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





