ஆடம்பரத்தைத் தவிர்த்த புதுச்சேரி முதல்வர்..!
புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சராக ஐந்தாவது முறையாக என். ரங்கசாமி நாளை பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள இந்த பதவியேற்பு விழா எவ்வித ஆடம்பரமும் இன்றி மிகவும் எளிமையான முறையில் நடைபெற உள்ளது. இதற்கான உத்தரவை அரசு அதிகாரிகளுக்கும், கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதா மற்றும் இதர தோழமைக் கட்சிகளுக்கும் ரங்கசாமி திட்டவட்டமாக வழங்கியுள்ளார்.
சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் ஆட்சியைப் பிடித்த பாரதிய ஜனதா கட்சி, அங்கு பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்க மிக பிரம்மாண்டமான முறையில் பதவியேற்பு விழாவை நடத்தியது. அதே உற்சாகத்துடன் புதுச்சேரியிலும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைய உள்ள நிலையில், இங்கும் பதவியேற்பு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. தரப்பில் ரங்கசாமியை அணுகினர்.
இருப்பினும், இந்த கோரிக்கையை ரங்கசாமி நிராகரித்துவிட்டார். பதவியேற்பு விழா என்பது சில நிமிடங்கள் மட்டுமே நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வு என்றும், தான் முதல் முறையாக முதல்வராகப் பதவியேற்கவில்லை, இது ஐந்தாவது முறை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய சூழலில் தேவையற்ற ஆடம்பரமும், பிரம்மாண்டமும் மக்களுக்குத் தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதும் ரங்கசாமி, விழாவை எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளார். ரங்கசாமியின் இந்த முடிவால் கவர்னர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.





