தனியார் பள்ளிக்கு வந்த மின்னஞ்சல்.. அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட மாணவர்கள்..!
மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சமம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த கெடுக்கம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் 4,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வந்த நிலையில் பள்ளியின் அலுவலகத்திற்கு இமெயில் ஒன்று வந்தது. அதில் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து பள்ளி நிர்வாகம் மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாங்காடு போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் பள்ளி வளாகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





