சென்னை 6 ஆண்டுகளாக இருப்பில் உள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட்டால் ஆபத்தா? சுங்கத்துறை அதிகாரிகள் விளக்கம்!!
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்துக்கு காரணம் அம்மோனியம் நைட்ரேட் கிடங்கில் தீப்பிடித்ததே காரணம் என்று தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், சென்னையிலும் 740 டன் அமோனியம் நைட்ரேட் 6 ஆண்டுகளாக திடங்கு ஒன்றில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி பீதியை கிளப்பியுள்ள நிலையில், சென்னையில் இந்த ரசாயனப் பொருள் பாதுகாப்பாகவே வைக்கப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுகம் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுமார் 100 கி.மீ. சுற்றளவு தூரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திய இந்த வெடி விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ஏராளமானோர் காயமடைந்த நிலையில், கட்டடங்கள் பல தரைமட்டமாகின. இந்த வெடி விபத்துக்கு காரணம், பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்றுமதி செய்வதற்காக 2750 டன் அமோனியம் நைட்ரேட் இருப்பு வைக்கப்பட்டிருந்த குடோனில் நடந்த தீ விபத்து தான் என்று தெரிய வந்தது.
இந்நிலையில் சென்னை துறைமுகம் அருகேயும் 740 டன் அமோனியம் நைட்ரேட், 6 ஆண்டுகளாக கிடங்கு ஒன்றில் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் சென்னையிலும் ஆபத்து என தகவல் வெளியாகியிருந்தது.
இதனை சுட்டிக் காட்டிய பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னையில இருப்பு வைக்கப்பட்டிருக்கும் அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பாகத் தான் உள்ளதா? எளிதில் தீப்பற்றக் கூடிய இந்த ரசாயன பொருளால் ஆபத்து நேரிடாதா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு விளக்கமளித்துள்ள சுங்கத்துறை அதிகாரிகள், சென்னையில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் பாதுகாப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
அச்சம் தேவையில்லை
கடந்த 6 ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் மணலி சுங்கத்துறை கிடங்கில் பாதுகாப்பாக உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் மின்னணு முறையில் ஏலம் விடப்படும். மணலி சுங்கத்துறை கிடங்கை சுற்றி வீடுகள் எதுவும் இல்லை என்றும் இதனால் அச்சம் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.







