--- --:--:-- --

ஓங்கியது எடப்பாடியின் கை! அதிமுகவில் புது திருப்பம்..!! * தனித்துவிடப்பட்டார் சண்முகம்.. * சரண்டர் ஆன எஸ்.பி.வேலுமணி!

edapad

அதிமுக என்னும் மாபெரும் அரசியல் சதுரங்க வேட்டையில், கடந்த சில மாதங்களாகவே நகர்த்தப்பட்டு வந்த காய்கள், இப்போது இறுதி ஆட்டத்தை நெருங்கியிருக்கின்றன. “யார் அண்ணன்? யார் தம்பி?” என்று பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்த ரத்தத்தின் ரத்தங்கள், இப்போது ஒற்றைத் தலைமைக்கு முன்னால் கைகட்டி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

 

‘விழுப்புரத்துச் சிங்கம்’ சி.வி. சண்முகமும், ‘கொங்கு மண்டலத் தளபதி’ எஸ்.பி. வேலுமணியும் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியபோது, தமிழகமே அசைந்துதான் பார்த்தது. ஆனால், “பொறுத்தவர் பூமி ஆள்வார்” என்ற பழமொழிக்கு ஏற்ப, எடப்பாடி அமைதியாக வீசிய வலை, இப்போது ஒட்டுமொத்த அதிருப்திப் பட்டாளத்தையும் சுருட்டி இழுத்து வந்திருக்கிறது.

 

ஆறு விக்கெட்டுகள்… ஒற்றை அஸ்திரம்!

 

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் வீசிய அதிருப்திப் புயல் சாதாரணமானதல்ல. எடப்பாடிக்கு எதிராக வேலுமணியும் சண்முகமும் கைகோர்த்தபோது, கட்சி இரண்டு துண்டாக உடையும் என்றே பலரும் கணித்தார்கள். சட்டமன்றத்திலும் இந்த விரிசல் அப்பட்டமாகத் தெரிந்தது. “நாங்கள் தனி வழி” என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்த அதிருப்தி அணியினருக்கு, எடப்பாடி பழனிசாமி கொடுத்த முதல் அதிர்ச்சிதான் இந்த ஆட்டத்தின் திருப்புமுனை.

 

வேலுமணி முகாமில் மிகத் தீவிரமாக இருந்த ஆற்காடு சுகுமார், பண்ருட்டி மோகன், காங்கயம் நடராஜன் உள்ளிட்ட ஆறு எம்.எல்.ஏ-க்கள் திடீரென பசுமை வழிச்சாலை இல்லத்திற்குப் படையெடுத்தனர். வெறும் சந்திப்பாக அது இருந்தால் பரவாயில்லை; “தெரியாமல் நடந்துவிட்டது, மன்னித்துவிடுங்கள்” என்று அவர்கள் கொடுத்த உருக்கமான கடிதம், வேலுமணி அணியின் முதுகெலும்பை உடைத்துவிட்டது. “கூட இருந்தே குழி பறிப்பார்கள்” என்பதை வேலுமணி சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த ஆறு பேரின் வரவால் எடப்பாடியின் பலம் 28 ஆக உயர, வேலுமணியின் கூடாரம் 15 ஆகச் சுருங்கியது.

த.வெ.க கொடுத்த ‘ஷாக்’… தப்பியதளபதிகள்!

 

இந்தக் குழப்பங்களுக்கு நடுவே, தமிழக அரசியல் களத்தில் மற்றுமொரு புதிய பூகம்பம் வெடித்தது. மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய நான்கு எம்.எல்.ஏ-க்கள் தங்களின் பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்டு, ஆளுங்கட்சியான த.வெ.க-வில் இணைந்தனர். இந்த அதிரடி நகர்வு, எஞ்சியிருந்த 14 அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் நெஞ்சில் மரண பயத்தைக் காட்டியது என்றே சொல்ல வேண்டும்.

 

“அங்கு போனால் பதவி காலி… இங்கே இருந்தால் எடப்பாடி சும்மா விடமாட்டார்” என்ற இக்கட்டான சூழ்நிலை உருவானது. த.வெ.க-விலும் தங்களுக்குப் பெரிய அளவில் சிவப்புக் கம்பள வரவேற்போ, அதிகாரப் பகிர்வோ கிடைக்காது என்பதை உணர்ந்துகொண்ட வேலுமணி தரப்பு, “இருப்பதைக் கொண்டு பிழைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம்” என்ற முடிவுக்கு வந்தது.

 

சரண்டர் வேலுமணி: ‘பயமே’ ஜெயம்!

 

நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த எஸ்.பி. வேலுமணி, உடனடியாக சி.வி. சண்முகத்தின் இல்லத்தில் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார். ஆனால், அந்த அறையில் விவாதிக்கப்பட்டது எடப்பாடியை எதிர்ப்பதற்கான வியூகம் அல்ல; அவரிடம் எப்படிச் சரணடைவது என்பதற்கான வழிமுறைகள்தான்.

 

ஆலோசனையை முடித்துக்கொண்டு, நத்தம் விஸ்வநாதன், திருத்தணி அரி, புவனகிரி அருண்மொழிதேவன் உள்ளிட்ட 14 எம்.எல்.ஏ-க்களும் வண்டியை நேராகப் பசுமை வழிச்சாலைக்கு விட்டனர். நேற்று வரை “அவர் யார் எங்களைக் கேட்க?” என்று மார்தட்டியவர்கள், இன்று எடப்பாடியின் கனிவான பார்வைக்காகக் காத்துக்கிடந்த காட்சி, காலத்தின் கட்டாயம். இந்த திடீர் மனமாற்றத்திற்குப் பின்னால் இருப்பது கொள்கை அல்ல, அக்மார்க் சுயநலம் மற்றும் அரசியல் இருப்பு மட்டுமே.

 

எடப்பாடியை எதிர்த்துத் தனித் குடித்தனம் நடத்தினால், சபாநாயகர் கையில் இருக்கும் கட்சித் தாவல் தடைச் சட்டம் தங்களின் எம்.எல்.ஏ பதவியைப் பறித்துவிடும் என்பதை அவர்கள் நன்றாகவே அறிவார்கள். “பதவி போனால் முகவரி போய்விடும்” என்ற எதார்த்தம், அவர்களை எடப்பாடியின் காலடியில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. இழந்த கட்சிப் பதவிகளை மீட்டு, வரும் தேர்தல்களில் சீட் வாங்க வேண்டும் என்றால், ‘இலை’ சின்னம் எடப்பாடியிடம் மட்டுமே இருக்கிறது என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

தனி மரமாகும் சண்முகம்: வீம்பா? விதியா?

 

இந்த ஒட்டுமொத்த சமரச நாடகத்திலும், அனல் பறக்கும் ஒரு கேள்விக்குறி சி.வி. சண்முகம்தான். வேலுமணி தரப்பு ஒட்டுமொத்தமாகச் சரணடைந்தபோதும், விழுப்புரம் சிங்கம் மட்டும் ஏன் பசுமை வழிச்சாலை பக்கம் எட்டிப் பார்க்கவில்லை?

 

அதற்குக் காரணம், சண்முகத்தின் மனதில் இருக்கும் ஆறாத வடு. தனது ராஜ்யசபா பதவியும் போய்விட்டது; இனி மாநில அரசியலும் எடுபடாமல் போய்விடுமோ என்பதுதான். “தேர்தல் தோல்விக்குக் கூட்டுப் பொறுப்பேற்காமல், என் மீது மட்டும் ஏன் பாய்வது?” என்பது சண்முகத்தின் குமுறல். கட்சியின் ஒருங்கிணைப்பு சரியில்லை என்று பகிரங்கமாகவே வெடித்த சண்முகம், இப்போது தனியாளாக நிற்கிறார்.

 

அரசியல் விமர்சகர்களின் கணிப்புப்படி, சண்முகத்திற்கு இப்போது வேறு வழிகள் இல்லை. த.வெ.க-வில் சேர்ந்தாலும் அங்கே இப்போதைக்கு அதிகாரம் கிடைக்கப் போவதில்லை. தி.மு.க-விற்குப் போவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படியென்றால், சண்முகத்தின் அடுத்த சாய்ஸ் என்ன? வீம்பை பிடித்துக்கொண்டு தனியாக நின்று அரசியல் முகவரியை இழப்பதா, அல்லது வேலுமணியைப் போல “மன்னிப்பாயாக” என்று எடப்பாடியிடம் சரணடைவதா?


தற்காலிக அமைதியா? நிரந்தரப் பிணைப்பா?

 

தற்போது 14 எம்.எல்.ஏ-க்களும் எடப்பாடியுடன் இணக்கமாகப் போக முடிவு செய்துள்ளதால், சபாநாயகரிடம் கொடுக்கப்பட்ட கட்சித் தாவல் புகார்கள் திரும்பப் பெற்றுள்ளனர் இதன் மூலம் அதிமுகவின் உட்கட்சிப் பூசல் தற்காலிகமாக ஒரு முடிவுக்கு வந்திருப்பது போலத் தோன்றுகிறது.

 

ஆனால், இது ‘நெருப்புக்கு மேல் போர்த்திய துணி’ போன்றதுதான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். வேலுமணி தரப்பு உண்மையிலேயே மனமாற்றம் அடைந்து வந்துள்ளதா அல்லது தங்களின் எம்.எல்.ஏ பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் போடப்பட்ட தற்காலிக வேஷமா என்பது போகப் போகத்தான் தெரியும்.

 

எது எப்படியோ, இப்போதைக்கு அதிமுகவின் ஒற்றை ராஜா எடப்பாடி பழனிசாமிதான் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. சண்முகத்தின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்? எடப்பாடி அவரைத் தேடிப் போய் சமரசம் செய்வாரா அல்லது சண்முகமே பணிந்து வருவாரா? பொறுத்திருந்து பார்ப்போம், இந்த ரத்தத்தின் ரத்தங்களின் ரத்த சரித்திரத்தை!

 


 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon