கடலூரில் கட்டுப்பாட்டை இழந்த லாரியால் அடுத்தடுத்து மோதல் – 10 பேர் காயம்

தூத்துக்குடியில் இருந்து பண்ருட்டி நோக்கி நேற்று மாலைமுந்திரி கொட்டை ஏற்றி வந்த லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி பண்ருட்டி கும்பகோணம் நெடுஞ்சாலையில் பணிக்கன் குப்பம் அடுத்த நரிக்குறவர் குடியிருப்பு என்ற இடத்தின் அருகேவந்து கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கும் இங்குமாக சென்று முன்னால் சென்ற பைக் மற்றும் பாரத் பெட்ரோலியம் டேங்கர் லாரி மீது மோதியது.டேங்கர் லாரி பண்ருட்டியில் இருந்து நெய்வேலிக்கு சென்ற அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.

 

இதில் அரசு பஸ்சில் பயணம் செய்த நெய்வேலி பழனி ( 62),அக்கட வல்லி தேவநாதன் மகன் ஆனந்த் (42), மோட்டார் சைக்கிளில் வந்த பண்ருட்டி சத்தியமூர்த்தி தெரு பன்னீர்செல்வம் மகன் அஸ்வின் குமார் ( 34) தெய்வசிகாமணி மகன் புருஷோத்தமன் ( 32 )உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர்.

 

இதையடுத்து காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 மற்றும் தனியார் ஆம்புலன்சில் ஏற்றி பண்ருட்டிஅரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான , பஸ், லாரிகள் என 3 வாகனங்கள் சாலையில் நின்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

இதையடுத்து போக்கு வரத்தை சரிசெய்யும் பணியில் பண்ருட்டி, காடாம்புலியூர், புதுப்பேட்டை போலீசார் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முழுமையாக பாதித்தது. இதைத் தொடர்ந்து போலீசார் -பொதுமக்கள் உதவியுடன் விபத்துக்குள்ளான பஸ், லாரிகள், ஆகிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.