இன்று தொடங்குகிறது பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு..!
தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இணையவழியில் இன்று தொடங்க உள்ளது.தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள பி.இ., பி.டெக் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், நடப்பு கல்வியாண்டில் 3 லட்சத்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.
விண்ணப்பித்த அனைவருக்கும் ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இறுதியாக 2 லட்சத்து 41 ஆயிரத்து 641 பேர் தகுதி பெற்றனர். இந்நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இணையவழியில் இன்று தொடங்குகிறது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழுள்ள சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.
மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவினருக்கான சிறப்பு கலந்தாய்வு நாளை மறுதினம் முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 14ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 19ஆம் தேதி வரை நடைபெறும்.
இதில், பொதுப் பிரிவில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும் நடைபெறும். மேலும் துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 23 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




