தமிழ்நாட்டின் 7 இடங்களில் நேற்று வெயில் சதமடித்த நிலையில், இன்றும் மதுரை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக சேலத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்தது.
அதேபோல ஈரோடு, கரூர் பரமத்தி மற்றும் வேலூரில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்திய நிலையில், திருத்தணி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
இந்த நிலையில், இன்றும் தமிழ்நாட்டின் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.குறிப்பாக, மதுரை, கரூர், ஈரோடு, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெயில் பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த நிலையில், நேற்று தஞ்சை, சிவகங்கை மாவட்டங்கள் மழையால் குளிர்ந்த நிலையில், சேலம் ஈரோடு மாவட்டங்கள் வெயிலில் வாடின. நேற்று (ஏப்ரல் 26) விடுமுறையைக் கொண்டாட கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த நிலையில் கனமழை வெளுத்து வாங்கியது. அதேபோல தஞ்சை, சிவகங்கை உள்ளிட்ட இடங்கள் கோடை மழையால் குளிர்ந்தன.
தஞ்சாவூரில் பகலில் வெயில் கொளுத்திய நிலையில் பிற்பகலில் திடீரென மழை பெய்தது. இதேபோல, கும்பகோணம், அய்யம்பேட்டை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மல்லிப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சிவகங்கை நகர்ப் பகுதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள காஞ்சிரங்கால், பையூர், வாணியங்குடியிலும், மானாமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.