தோனி இன்று ஓய்வு பெறுகிறாரா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 183 ரன்கள் எடுத்துள்ளது. 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை மூன்று முப்பது மணிக்கு தொடங்கிய 17வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

 

டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய டெல்லி அணி ரன் கணக்கை தொடங்கும் முன்னரே விக்கெட் கணக்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜேக் ஃப்ரேசர், அஸ்வின் பந்தில் கலீல் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

 

தொடக்கமே நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் அடுத்தடுத்து களமிறங்கிய டெல்லி வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன் ரேட்டை உயர்த்தினர்.குறிப்பாக விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பி வாண வேடிக்கை காட்டினார். அவருக்கு உறுதுணையாக அபிஷேக் போரெல், அக்சர் படேல், சமீர் ரிஸ்வி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

 

20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் ஜடேஜா, கலீல் அகமது சிறப்பாக பந்துவீசினர்.இதற்கிடையே, தோனியின் பெற்றோர் பான் சிங் தோனி மற்றும் தேவகி தேவி ஆகியோர் இன்றைய போட்டியை கண்டு வருகின்றனர். 2008 ஆம் ஆண்டு முதல் தோனி சென்னை அணிக்காக விளையாடி வரும் நிலையில், இதுநாள் வரை தோனியின் பெற்றோர் சென்னை வந்ததில்லை.

 

தோனியின் பெற்றோர் ஐ.பி.எல். போட்டியைக் காண இங்கு வருவது இதுவே முதல் முறை. கூடவே, தோனியின் மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஷிவாவும் பங்கேற்றுள்ளனர். இதனால், தோனி ஓய்வு குறித்து அறிவிப்பு இன்றைக்கு வெளியாகலாம் என்று வலைதளங்களில் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.இன்றைய போட்டிக்கு முன்னதாக, எம்.எஸ். தோனி சி.எஸ்.கே. அணியை வழிநடத்தப் போகிறார் என்ற வதந்திகள் பரவின.

 

ருதுராஜ் கெய்க்வாட்டின் உடற்தகுதி நிலை குறித்து சந்தேகங்கள் எழுந்தன. கடந்த ஞாயிற்றுக்கிழமை கவுகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடுக்கு முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பங்கேற்க முடியாத பட்சத்தில் தோனி சிஎஸ்கே அணியை வழிநடத்துவார் என்ற பேச்சுக்கள் எழுந்தன. இருப்பினும், கெய்க்வாட் அணியை வழிநடத்தினார்.