ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கின் போது எவற்றிற்கு அனுமதி..!
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதி இல்லை.
பால் வினியோகம், தினசரி பத்திரிக்கை வினியோகம், மருத்துவத் துறை சார்ந்த பணிகள் ஆம்புலன்ஸ் மற்றும் ஆம்புலன்ஸ் ஊர்தி சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படும். அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாய பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் எரிபொருளை எடுத்து செல்லும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
இந்த நேர கட்டுப்பாடு ஆன்லைன் மூலம் உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்களுக்கும் பொருந்தும் மற்றும் சேவைகளுக்கு அனுமதி இல்லை ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றலாம். அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு ஊரடங்கின் போது செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே பங்கேற்கலாம். இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே பங்குகேற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு பொருந்தாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.






