அடுத்தாண்டு முதல் கூடுதல் மையங்கள் அமைக்க உத்தரவு..!
நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக அடுத்தாண்டு முதல் அந்தந்த மாநிலங்களில் கூடுதல் மையங்கள் அமைக்க வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு நீட் தேர்வு விண்ணப்பங்கள் பெறத் துவங்கிய சில மணி நேரங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்வு மையங்கள் நிரம்பி விட்டதாக கூறி இந்த தேர்வு மையங்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவங்களில் இருந்து நீக்கப்பட்டன.
இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் மையங்களை அமைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது மற்றவை எனக் குறிப்பிட்டால் அதை பரிசீலித்து அவர்களின் மாநிலங்களுக்கு உள்ளேயே தேர்வு மையங்கள் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தேர்வு முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அடுத்த ஆண்டு முதல் மாணவர்கள் தங்கள் மாநிலங்களிலேயே தேர்வு எழுதும் வகையில் கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும் என தேசிய தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.






