தமிழகத்தில் இன்று 2,257 பேருக்கு கொரோனா பாதிப்பு..!18 பேர் உயிரிழப்பு…! சென்னையில் தொடர்ந்து குறையும் தொற்று எண்ணிக்கை!!
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 2257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பும் 18 ஆக குறைந்துள்ளது. சென்னையிலும் தினசரி தொற்று பாதிப்பு 600-க்கு கீழாக இன்று குறைந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் , உயிரிழப்பும் படிப்படியாகவே குறைந்து வருகிறது. இன்றைய நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,46,079 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று உயிரிழப்பும் 20-க்கு கீழாக குறைந்து 18 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,362 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 2308 ஆகும்.இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,15,892 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் சராசரி 92% ஆக உள்ளது. தமிழகத்தில் தற்போது 18,825 பேர் மட்டுமே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து, இன்று 600-க்கு கீழாக 585 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.






