தனது மனைவிக்கு வேறொரு திருமணம் செய்ய வைக்க முயற்சி என கார்த்திகேயன் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு..!
கோவையில் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு தற்போது பிரிந்திருக்கும் கார்த்திகேயன் மற்றும் தமிழினியை ஒரு வாரத்திற்குள் கோவை மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆஜர் ஆகும்போது யாருடைய தலையீடும் இல்லாமல் அவர்கள் இருவரை மட்டுமே வைத்து விசாரித்து உரிய உத்தரவை கோவை மாவட்ட நடுவர் நீதிமன்ற நீதிபதி பிறப்பிக்க வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கார்த்திகேயன், தமிழினி கடந்த ஐந்தாம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து கார்த்திகேயனையும், அவரது தாயாரையும் தாக்கிவிட்டு தமிழினியை அவரது பெற்றோர் அழைத்து சென்று விட்டதாக தெரிகிறது. மேலும் தமிழினிக்கு வேறொரு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடப்பதால் தனது மனைவியை மீட்டுத் தரக்கோரி கார்த்திகேயன் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.






