காப்பக சிறுவர்களுக்கு கொரோனா பரவியது எப்படி…? என உச்சநீதிமன்றம் கேள்வி
சென்னை ராயபுரம் பகுதியில் இருக்கும் காப்பகத்தில் உள்ள சிறுவர்களுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராயபுரம் காப்பகத்தில் இருக்கும் 35 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். காப்பகத்தின் விடுதி காப்பாளர் மூலமே குழந்தைகளுக்கு தொற்று பரவியதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் கொரொனா தொற்று தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு விசாரணை நடத்தியது.
நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணையில் தமிழகத்தில் குழந்தைகள் காப்பகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக சுகாதாரத் துறை செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை, குழந்தைகளுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டு அதனை தடுக்க என்ன திட்டம் வகுக்கப் பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.






