--- --:--:-- --

இளையான்குடி அருகே சவடுமண் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்

0.7

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆற்று மணலை கொள்ளையடிக்கும் சவடு மண் குவாரியை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமை கிராம மக்கள் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இளையான்குடி வட்டம் சாலைக்கிராமம் அருகே முத்தூர் கிராமத்தில் தனியார் பட்டா நிலத்தில் சவடு மண் அள்ளிக்கொள்ள அரசு நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

இந்த சவடு மண் குவாரியிலிருந்து ஆற்றுமணலை ராட்சத பொக்லைன் இயந்திரம் மூலம் அள்ளி லாரிகளில் ஏற்றி இந்த மணல் கட்டுமானப் பணிகளுக்கு 5 யூனிட் ரூ 60 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.  இவ்வாறு சவடுமண் அள்ள அனுமதி வாங்கிவிட்டு அந்த இடத்தில் 3 அடிக்கு கீழே கிடைக்கும் ஆற்றுமணலை கொள்ளையடிக்கும் கும்பலால் இப் பகுதியில் குடிநீர் திட்டங்கள், விவசாய கிணறுகள் வறண்டு விட்டன.

 

இதையடுத்து இந்த சவடு மண் குவாரியை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முத்தூர் கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர் இணைந்து குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டம் நடத்துபவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். இப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வீரபாண்டி, தாலுகா செயலாளர் அழகர்சாமி, கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் தண்டியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon