கொரொனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை நிர்ணயிக்கும் கட்டணம் எவ்வளவு?
தனியார் மருத்துவமனைகளில் கொரொனா சிகிச்சைக்காக சுமார் 5 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம் என இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக பிரிவு பரிந்துரைத்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள கட்டணம் தொடர்பான பட்டியலில் லேசான அறிகுறி கொண்ட கொரொனா நோயாளிகளுக்கு 10 நாட்களுக்கான சிகிச்சை கட்டணமாக இரண்டு லட்சத்து 31 ஆயிரத்து 820 ரூபாய் வரை தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கலாம் என பரிந்துரைத்துள்ளது.
அதாவது படுக்கை வசதி, மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள், நிர்வாகக் கட்டணம் என மருத்துவர் பீஸ் சேர்க்காமல் ஒருநாள் சிகிச்சைக்கு 23 ஆயிரத்து 182 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது லேசான பாதிப்புள்ள கொரொனா நோயாளிகளுக்கு மட்டும்தான்.
தீவிர பாதிப்படைய நோயாளிகளுக்கு ஒரு நாளுக்கு 25 ஆயிரத்து 377 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கான சிகிச்சை கட்டணமாக 4 லட்சத்து 31 ஆயிரத்து 416 ரூபாய் வசூலிக்கலாம் எனவும் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக பிரிவு பரிந்துரை வழங்கியுள்ளது.
இந்த கட்டணத்தை தவிர மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் உணவு போன்ற செலவினங்களுக்காக ஒரு நாளைக்கு 9 ஆயிரத்து 600 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நோயாளியின் உடல்நிலையை பொறுத்து அவர்களுக்கு சிகிச்சை தேவைப்படும் நாட்களுக்கு ஏற்ப கட்டணத்தை மாற்றி அமைக்கவும் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக பிரிவு பரிந்துரைத்துள்ளது.






