மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில் நான்காவது கட்ட ஊரடங்கு நீட்டிப்பு அறிவிக்கப்பட்டது. இதன்படி உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தேசிய ஊரடங்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் சிவப்பு மண்டலங்கள் குறித்து மாநிலங்களை முடிவு செய்துகொள்ளலாம். விமானம், ரயில், மெட்ரோ சேவை, பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள், திரையரங்குகள், ஹோட்டல்கள், மால்கள், மதுபான பார்கள், உடற்பயிற்சி மையங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.
பார்வையாளர்கள் இல்லாமல் விளையாட்டு அரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்படும். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் 50 பேர் வரையிலும் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பேருந்து பொது போக்குவரத்தை துவங்குவது குறித்தும் சலூன் கடை திறப்பது குறித்தும் மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம்.
பொது இடங்களில் எச்சில் துப்புவது தண்டனைக்குரிய குற்றம் என மீண்டும்அறிவித்துள்ள மத்திய அரசு, பொது இடங்களிலும் பணியாற்றும் இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என வலியுறுத்தியுள்ளது. இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.
65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிப்பெண்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் வீட்டிலேயே தங்கி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.ஊழியர்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றுவதை ஊக்குவிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.