சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சித்தமல்லிபட்டியைச் சேர்ந்த நெவலி என்பவரின் மகன் அஜித் (வயது19) இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதே ஊரைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் சதீஷ்குமார் ஆகிய இருவரும் சித்தமல்லி கண்மாய் பகுதியில் உடும்பை வேட்டையாடி அதை தோளில் போட்டபடி கடந்த ஆண்டு ஜூலை 26ம் தேதி டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டனர்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து வன உயிரின குற்றத் தடுப்புப் புலனாய்வுப் துறையினர், சிவகங்கை மாவட்ட வன அலுவலர் ரமேஷ்வரனுக்கு கடந்த மே 7 ம் தேதி இதுதொடர்பாக தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து, மாவட்ட வன அலுவலர் அளித்த உத்தரவின் பேரில் திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் மதிவாணன் வனவர்கள், வனகாப்பாளர் மற்றும் வனக்காவலர்களுடன் சித்தமல்லிபட்டியில், கடந்த 4 நாட்களாக இருவரையும் தேடி விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், டிக்டாக்கில் உடும்பை கையில் பிடித்து வீடியோ வெளியிட்ட அஜித் எனும் இளைஞரை கைது செய்து சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கிளைச் சிறைச்சாலையில் அடைத்தனர்.