தென்மேற்கு பருவமழை வரும் 16ஆம் தேதி தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அனேகமாக அந்தமான், நிகோபார் தீவு பகுதியில் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 13ம்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும். வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மதுரை, திருச்சி, கரூர், சேலம், தருமபுரி, வேலூர் மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக கூடும் என்றும் சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.