மாமல்லபுரம் அருகே சாலையை கடக்க முயன்ற தாயும் 4 வயது மகனும் கார் மோதி காயமடைந்த நிலையில் காப்பாற்ற ஆளின்றி உயிரிழந்தனர். புதிய கல்பாக்கத்தை சேர்ந்த சத்தியமூர்த்தியின் மனைவி திலகவதி. இவர் எல்கேஜி மாணவனான 4 வயது மகன் திருமுருகனை தனியார் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.
பேருந்து நிறுத்தம் அருகே சென்டர் மீடியன் வழியாக சாலையை கடக்க முயன்ற போது சென்னையை நோக்கி அதிவேகமாக வந்த கார் இருவர் மீது மோதியது. இதில் சாலையோரம் தூக்கி வீசப்பட்டு படுகாயத்துடன் வெகுநேரமாக உயிருக்கு போராடிய நிலையில் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

தகவலறிந்து மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்தபோது இருவரும் இறந்துவிட்டனர். காரை திருவிடந்தை அருகே நிறுத்தி சென்று தப்பிச்சென்ற ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர். இங்கு பாதசாரிகள் சாலையைக் கடக்கும் வகையில் வெள்ளை எச்சரிக்கை கோடுகள் உள்ளது.
அதை ஓட்டுனர் கவனித்து இருந்து வேகத்தை குறைத்தால் விபத்தை தவிர்க்கலாம் என்றும், சாலையை கடக்கும் போது கொஞ்சம் நிதானித்து கவனமாக சாலையை கடந்து இருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது என்றும் போலீசார் தெரிவித்தனர்.






