அதிக மாத்திரைகளை சாப்பிடவேண்டாம் – மருத்துவர்கள் மூத்த குடிமக்களுக்கு எச்சரிக்கை

அதிகமாக மாத்திரை சாப்பிட வேண்டாம் என மூத்த குடிமக்களை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சராசரியாக மூத்த குடிமக்கள் ஒவ்வொருவரும் தினசரி 8 மாத்திரைகள் சாப்பிடுவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

 

இதுதொடர்பாக தனியார் மருத்துவ கல்லூரிகள் சார்பில் 104 மூத்த குடிமக்களின் மருந்து சீட்டுகளை வைத்து ஆய்வு நடத்தி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மருந்துகளை பரிந்துரைப்பது குறித்து பல்வேறு துறை நிபுணர்கள் ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்வது இல்லை என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

 

நோயாளிகளும் மறுமுறை மருத்துவரை அணுகாமல் நீண்ட நாட்களுக்கு முன்பு கொடுத்த மருந்துகளை சாப்பிடுகிறார்கள் என்றும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மூத்தகுடிமக்கள் ஏற்கனவே சாப்பிடும் மாத்திரைகள் பற்றி தெரிந்து கொள்ளாமல் மேலும் சில மாத்திரைகளை பணியில் இருக்கும் மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

 

இதுபோன்ற காரணங்களால் மூத்த குடிமக்கள் பலரும் தேவையற்ற மாத்திரைகள் பலவற்றை சாப்பிடுகிறார்கள் என்பதோடு இதற்காக அதிக தொகையை செலவிடுகிறார்கள் என்றும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

 

மூத்த குடிமக்கள் சராசரியாக தினமும் 8 மாத்திரைகளை சாப்பிடுவதாகவும் பலரும் வலி மற்றும் பல்வேறு நோய்களுக்காக தினமும் குறைந்தது 2 முதல் அதிகபட்சமாக 15 மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாத்திரைகளை எதிர் வினையை ஏற்படுத்துகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply