வெங்காயம் 500 ரூபாய்க்கு விற்றால் கூட எங்களுக்கு கவலை இல்லை!

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. ஆனால் கிலோ 500 ரூபாய் என்று விற்றால் கூட கவலைப்படாத கிராமம் பிஹாரில் உள்ளது. சமையலில் எந்த உணவாக இருந்தாலும் முக்கிய பங்கு வகிக்கும் வெங்காயத்தின் விலை பலரை கண்ணீர் விடச் செய்துள்ளது.

 

பலத்த மழை, வரத்து குறைவு, தட்டுப்பாடால் விலையேற்றம் என பல காரணங்கள் கூறப்படுகின்றன. பிஹாரில் பொதுவாக ஒரு கிலோ வெங்காயம் 70 ரூபாய் முதல் 80 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும் அம்மாநில தலைநகர் பாட்னாவில் பலபகுதிகளில் கூட்டுறவு சந்தைப்படுத்தல் சங்கத்தின் சார்பில் வெறும் 35 ரூபாய்க்கு மானிய விலையில் விற்கப்படுகிறது.

இதை வாங்க இல்லத்தரசிகள் அலைமோதினாலும் ஜெகநாத் மாவட்டத்தில் ஒரு கிராமத்தினர் ஒரு கிலோ 500 ரூபாய்க்கு விற்றால் கூட கவலைப்படுவது இல்லை என்கின்றனர். மொத்தம் 35 குடும்பங்களை சேர்ந்த 300 முதல் 400 பேர் வரை வசிக்கும் இந்த கிராமத்தில் பல நூற்றாண்டுகளாக வெங்காயம், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை சமையலில் பயன்படுத்துவது இல்லை.

 

அனைவரும் சைவ உணவை மட்டுமே உண்கின்றனர். கிராமத்தில் விஷ்ணு கோயில் இருப்பதால் வெங்காயத்தை நெடுங்காலமாகவே தவிர்க்கும் இவர்களுக்கு அதன் விலை எவ்வளவு என்று கூட தெரியாது என்பதுதான் வியப்பு.


Leave a Reply