தாய்லாந்தில் நடைபெறும் 16வது ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தாய்லாந்து சென்றுள்ளார். தாய்லாந்தில் நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதி ஆசியான் மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 ஆம் நாள் பயணமாக தாய்லாந்து சென்றுள்ளார்.
தலைநகர் பாங்காக் நகரில் அமைந்துள்ள தேசிய உள்விளையாட்டு அரங்கில் தாய்லாந்து வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அப்போது தாய் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார். உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தை பிடித்த திருக்குறள் தற்போது தாய்லாந்து மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பாங்காக்கில் உள்ள பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் ஆங்கிலத்தில் இருந்து தாய்லாந்து மொழியில் மொழி பெயர்த்தார். இவர் ஏற்கனவே டாக்டர் அப்துல் கலாமின் அக்னி சிறகுகள் புத்தகத்தையும் தாய்லாந்து மொழியில் மொழிபெயர்த்துள்ளார். கடந்த ஓராண்டாக முயற்சித்து மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை தாய்லாந்து தமிழ்ச்சங்கம் வெளியிடுகிறது.
இதனை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட வேண்டுமென தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் தாய்லாந்து நாட்டு தமிழ் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து புத்தகத்தை வெளியிட பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய தூதரகம் தமிழ் சங்கத்திடம் தெரிவித்தது. புத்தக வெளியீட்டு விழாவில் தாய்லாந்து தமிழர்கள் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சேலை அணிந்து பங்கேற்க உள்ளனர்.
இந்த விழாவை தொடர்ந்து மூன்றாம் தேதி நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்கிடையே ஆசியான் உறுப்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். தாய்லாந்து பிரதமரை, மோடி சந்தித்து உரையாற்ற உள்ளார். குருநானக்கின் 550-ஆவது பிறந்த நாளையொட்டி சிறப்பு நாணயம் ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.