ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் திரைப்படங்கள்,வெப் சீரிஸ் ஆகியவை தனது அனுமதியின்றி தயாராகி வருவதால் அவற்றிற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனு தாக்கல் செய்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் தலைவி என்ற தமிழ் படத்தை இயக்குனர் ஏஎல் விஜயும், ஜெயா என்ற இந்தி படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கி வருகின்றன.இதேபோல அவரது வாழ்க்கை வரலாற்றை வைத்து குயின் என்ற இணையதள தமிழ் தொடரை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார்.
இது தொடர்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றில் தனது வாழ்க்கையை சேர்த்து எடுத்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் தங்களது குடும்பத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா? என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக தனது அனுமதியின்றி தலைவி, ஜெயா ஆகிய திரைப்படங்கள் மற்றும் குயில் வெப்ஸீரிசை விளம்பரப்படுத்தவோ திரையிடவோ கூடாது என உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.