பெண்ணை கொலை செய்து 7 துண்டுகளாக்கி வெட்டி சூட்கேஸில் அடைத்த கொலையாளிக்கு சாகும் வரை தூக்கிலிட உத்தரவு! கோவை நீதிபதி அதிரடி !!!

கோவை அவிநாசிரோடு, ரஹேஜா அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்தவர் சரோஜினி.வயது 54. ஓய்வுபெற்ற கணவர், மகன், மருமகள், 4வயது பேரன் என குடும்பத்துடன் வசித்து வந்த சரோஜா,
கடந்த 2013ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 13ம் தேதி காணாமல் போனார். வீட்டிலிருந்து அனைவரும் பணி உள்ளிட்ட காரணங்களால் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த சரோஜா காணாமல்போனது குறித்து வீடு திரும்பிய குடும்பத்தினருக்கு தெரியவந்தது.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் 19 ஆம் தேதி எதிர் வீட்டிலிருந்து துர்நாற்றம் வரவே வீட்டை திறந்து பார்த்தபோது இரண்டு சூட்கேஸ்களில் ஏழு துண்டுகளாக கை, கால்கள், தொடை, கழுத்து முதல் இடுப்பு வரை என உடல் உறுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. துர்நாற்றம் வீசாமல் இருக்க சூட்கேசை சுற்றியும் சிமென்ட் பூசப்பட்டிருந்தது. விசாரணையில் அந்த வீட்டில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த யாசர் அராபத் (29) வசித்து வந்தது தெரியவந்தது. ஏழு தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவான யாசர் அராபத்தை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கியிருந்த யாசர் அராபத்தைகாவல் துறையினர் கைது செய்தனர்.விசாரணையில் சரோஜா அணிந்திருந்த 12 பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பான வழக்கு கோவை 4வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

வழக்கு விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஒரு பெண் என்றும் பாராமல் கொடூரமாக கொலை செய்து 6 நாட்கள் மறைத்து வைத்தது மட்டுமின்றி அதன் பிறகான நடவடிக்கை பார்த்து இந்த வழக்கை அரிதினும் அரிதான வழக்காக கருதி கொலைப்பிரிவிற்கு சாகும் வரை தூக்கிலிடவும், தடயத்தை மறைத்ததற்கும், நகைகளை திருடியதற்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கை திறம்பட விசாரித்த வழக்கின் புலனாய்வு அதிகாரிக்கு விருது வழங்கவும் அரசுக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தார்.இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply