நாடு முழுவதும் 75 மருத்துவக்கல்லூரிகள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,இதன் மூலம் வரும் 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் மருத்துவ சீட்டுகள் அதிகம் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வின் குமார் சவ்பே நம்பிக்கை.” புற்று நோய்க்கு எதிரான போர் ” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வின் குமார் சவ்பே இன்று கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் துவக்கி வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர்,கோமியம், விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்படும் எனவும்,அதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.மேலும்,பாரம்பரிய மருத்துவ முறைகளான யோகா, சித்தா போன்றவற்றை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளதாகவும்,நாடு முழுவதும் 75 மருத்துவக் கல்லூரிகள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் மருத்துவ சீட்டுகள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும்,மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதே போல நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.சேலம், மதுரை ,தஞ்சாவூர் ஆகிய மூன்று பகுதிகளில் உள்ள மருத்துவக் கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த நிதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் அந்த கல்லூரிகளில் மருத்துவ சீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும்,அரசு எல்லோருக்கும் தேவையான நல்லதையே செய்யும் என நீட் தேர்வு ரத்து குறித்து கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
முன்னதாக ” புற்றுநோய்க்கு எதிரான போர் ” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக கோவைக்கு வருகை தந்த மத்திய சுகாதாரத்துறை இணை யமைச்சர் அஸ்வின்குமார் சவ்பே ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள பச்சிளம் சிசுக்களுக்கான இலவச புற்றுநோய் நோயியல் பிரிவை திறந்து வைத்தார்.இந்த மையத்தில் புற்றுநோயாளிகளுக்கு கதிர்வீச்சு தொழில்நுட்பம் மூலம் சிகிச்சை அளிக்கும் கருவியான அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எலக்ட்ரோ லீனியர் ஆக்ஸிலரேட்டர் என்ற கருவியையும் அமைச்சர் துவக்கி வைத்து பேசினார்.
அப்பொழுது,பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை தாண்டி யாராக இருந்தாலும் புற்றுநோய் என்ற வார்த்தையை கேட்ட மாத்திரத்தில் அதிர்ச்சிக்குள்ளாவதாகவும், மத்திய அரசின் ஆயுஸ்மான் பாரத் போன்ற திட்டங்கள் சாமானிய மனிதர்களுக்கும் புற்றுநோய் போன்ற பெரிய நோய்களை எதிர்கொள்ள உதவுகின்றன. இருப்பினும் மத்திய அரசின் இதய முயற்சிகளை தாண்டி புற்று நோயை தடுக்கவும், சமாளிக்கவும், எதிர்கொள்ளவும் சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் குறிப்பாக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் முன்வர வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும்,சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு புற்று நோய்க்கான இலவச சிகிச்சை,தங்குமிடம் மற்றும் உணவு ஆகியவற்றை தருவதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையோடு கரம் கொடுத்துள்ள ரோட்டரி இன்டர்நேஷனல் மற்றும் ரோட்டரி மாவட்டம் இதன் மூலம் புற்றுநோய் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக உள்ளதாக தெரிவித்தார்.மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதைப்போல் கோவையின் மிக தரமான பன்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளில் முக்கியமான ஒன்றான ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை பல நல்ல உள்ளங்களோடு சேர்ந்து சமூகத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கும் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை பெற வைப்பதன் மூலம் இந்திய சுகாதாரத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.
” புற்றுநோய்க்கு எதிரான போர் ” என்ற இந்திய அரசின் முன்னெடுப்பின் ஒருபகுதியாக வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க உள்ளது வரவேற்கத்தக்கது என்றும், இந்த நவீன கருவியின் மூலம் வெறும் ஐந்து நிமிடத்தில் சிகிச்சை அளித்து விட முடியும் எனவும்,அதுவும் நோய் பாதித்த இடங்களை திரையில் கண்டவாறு சிகிச்சை அளிக்க கூடிய வசதியும் உள்ளது மிகவும் சந்தோஷம் அளிப்பதாகக் கூறினார்.