கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீராதாரமான பில்லூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளதால் பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மற்றும் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீராதாரமாக விளங்கி வரும் பில்லூர் அணை தற்போது தனது முழு கொள்ளளவான 100 அடியில் 96 அடியாக உள்ளது.
அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக உள்ளது.அணையின் நீர்மட்டம் 97 அல்லது 98 அடியாக வரும் பொழுது அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் இரு மதகுகளின் வழியாக திறக்கப்பட உள்ளது.
இதனால் ஆற்றில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள தேக்கம்பட்டி,நெல்லித்துறை,சிறுமுகை,வச்சினம்பாளையம் உள்ளிட்ட பவானி ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும்,பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயத்தில் ஆற்றை கடக்கவோ,ஆற்றில் இறங்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.