கோவையில் இளம் ஓவியர்களின் கைவண்ணங்களில் உருவான ஆர்டிசி கூட்டு ஓவிய கண்காட்சி…காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது!

கோவை ஜென்னி கிளப்பில் Nac நுண்கலை அகாடமி சார்பில் ஆர்டிசி கூட்டு ஓவியக் கண்காட்சி தொடங்கியுள்ளது. ஓவிய பிரியர்களுக்காக துவங்கப்பட்டுள்ள இக்கண்காட்சியை சிறுதுளி அமைப்பின் நிறுவனர் வனிதா மோகன் தொடங்கி வைத்தார்.

Nac அகாடமியின் நிறுவனர் பரூக் ஷா மேற்பார்வையில் இளம் ஓவியர்கள் வரைந்த ஓவியங்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன. அதன்படி நீர் சேமிப்பு, கலாச்சாரம், வனங்கள் பாதுகாப்பு உள்ளிட்ட தலைப்பின் கீழ் இந்த ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.

மேலும்,கத்தியால் வரையப்பட்ட ஓவியம் , திரவங்களை கொண்டு
வரையப்பட்ட ஓவியம், மணலால் வரையப்பட்ட ஓவியம் என இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் காண்போரை கவரும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அத்துடன் விலங்குகளின் தோற்றம், கிராமிய பண்பாட்டை பிரதிபலிக்கும் ஓவியங்கள் என அனைத்து ஓவியங்களும் கண்களை கவர்ந்திழுக்கும் வகையில் இளம் ஓவியர்களால் வரையப்பட்டுருந்தன.

இந்த ஓவிய கண்காட்சியில் 5ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
அவர்கள் கூறுகையில், தங்களுக்குள் இருக்கும் ஓவிய ஆற்றலை வெளிக்கொண்டு வரும் வகையில் இக்கண்காட்சி அமைந்துள்ளதாக கூறினர். இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஓவியம் குறித்த புரிதலை தங்கள் பெற்றோர்களுக்கும், ஓவியத்தின் சிறப்பை தங்களுக்கும் உணர்த்தும் விதமாக இருப்பதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


Leave a Reply